செவ்வாய், மே 20, 2008

அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

செவ்வாய், மே 06, 2008

உனக்காக மட்டும்....


உன்னிடம் எனக்கு
மிகவும் பிடித்ததை
நான் சொன்னபோது
உன் முகம்போன
போக்கையும்
கை போன
போக்கையும் காண
கண்கோடி வேண்டுமடி...




நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...






முத்தம் கொடுக்க
வெட்கமாக இருக்கிறதென
சாக்கு சொல்லித்திரிகிறாயே
நான் வேண்டுமானால்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
அப்பொழுதாவது
கொடுத்துத்தொலையேன்...


ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?


அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்



ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...



ஒன்றேயொன்று
கொடுக்கவே
யோசித்தவள்
நீதானா என
திக்குமுக்காடிப்
போனேன் உன்
உதடுகளின்
வேகம் கண்டு...


போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...



கேட்டபோதெல்லாம்
கொடுக்காமல்
கேட்காதபோது
இப்படியா என்
முகம் நனைய முத்தி
எடுப்பது..?
இதற்கெல்லாம்
மசிய மாட்டேன்...
உன் முத்தங்கள்
முழுதும் என்னை
நனைக்கும் வரை...


முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி
கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?