எப்போழுது செல்வராஜ் எனக்கு பழக்கமானான் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் செல்வராஜின் நினைவுகள் எனக்கு சுவாரஸ்யமானவை.
நான் அப்பொழுது +1 படித்துக்கொண்டிருந்தேன்.செல்வராஜும் அப்பொழுது என்னுடன் படித்துக்கொண்டிருந்தான்.என் நண்பன் செந்தில்தான் எனக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தான் என நினைக்கிறேன்.
செல்வராஜின் முழுநேர மூச்சு,முக்கல் , முனகல் , உயிர், பிராணவாயு எல்லாமே ஃபிகர்களின் தலபுராணம், கந்த புராணங்களை சேகரிப்பதுதான்.படிப்பில் ஒரு பாமரனாக இருந்தால் கூட இந்த விசயத்தில் ஒரு சூப்பர் கம்யூடராக இருந்தான். எனவே ஃபிகர் மடக்க நினைப்பவர்கள் செல்வராஜை கும்பிட்டு காரியத்தை தொடங்குவது வழக்கம்.
செல்வரரஜிடம் ஃபிகர் புழங்கும் இடம், நிறம், உயரம் சொல்லிவிட்டால் போதும். மடைதிறந்த வெள்ளம்போல் அவள் பெயர்,தந்தை பெயர், அம்மா, அக்கா, அண்ணன்,தாத்தா,பாட்டி,பாட்டன் வரை அனைத்து தகவல்களையும் துப்புவான்.அவனது இந்த திறமையை நாங்கள் ரசித்து பிரமிப்பதுண்டு.
செல்வராஜ் சிரித்தால் அவன் முன்னிரண்டு பற்களும் இருக்காது.அது அவனின் வீர விழுப்புண் என கூறிக்கொள்வான்.ஒருமுறை லவ்லெட்டரை ஆட்டோவில் செல்லும் 10வது படிக்கும் ஃபிகருக்கு அர்ஜுனன் பாணியில் ஏரோ விட அது அந்த ஃபிகரின் அண்ணன்களிடம் கிடைக்க பீமன் கணக்காக வந்து இறங்கியவர்கள் சுண்டெலி போல் இருந்த செல்வராஜை விட்ட அறையில் முன்னிரண்டு பற்கலும் விடுதலை அடைந்தன.
தனது ப்ரொபசனில் இவ்வளவு சிரமங்களை கொண்டபோதிலும் செல்வராஜ் தன் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை..+1ல் அவன் பெயில் ஆனபொழுது சொன்ன வார்தைகள் இன்னும் என் காதில் ரீங்காரமிடுக்கொண்டிருக்கின்றன.
“ +1 ல் பாஸ் ஆகலைனா அடுத்த வருஷம் பாஸ் பண்ணிகலாம் !
ஆனா நம்மல க்ராஸ் பன்ற ஃபிகரை மிஸ் பண்ணிடா வெற எவனாவது பிக்கப் பண்ணிகுவான். “
கேட்ட எங்களுக்கு புல்லரித்தது.
கல்லூரி விடுமுறையில் எனது ஊருக்கு சென்றிருந்த போது எனக்கு செல்வராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“ என்ன செல்வராஜ் என்ன பண்ணிட்டு இருக்கே?”
“ +1 படிச்சிட்டு இருக்கேன் மச்சி ! “
“ என்ன இந்த பக்கம்? “
“ஒண்ணும் இல்ல அன்சாரி தெரு 5ம் நம்பர் வீட்டுல ஒரு ஃபிகர் புதுசா வந்நதிருக்கு அதான் ! “ வழிந்தான் செல்வராஜ்.
எனக்கு தலையை சுற்றிகொண்டு வந்தது.
“ முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் “ என்பது செல்வராஜ் விசயத்தில் பொய்த்து வந்தாலும் “ தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் “ கணக்காய் செல்வரரஜ் இருந்து வந்தான்.தர்ம அடி, பொதுமாத்து, வீட்டிலும் வெளியிலும் செல்வராஜுக்கு மானாவாரியாக கிடைத்ததால் நாங்கள் அடிக்கடி செல்வராஜை கையில் கட்டு ,பிளாஸ்த்திரியுடன் பார்ப்பது சகஜமாகிவிட்டது.
இவ்வளவு முயற்சி செய்தும் ஒரு ஃபிகர் கூட அவனுக்கு கிடைக்காததை நினைத்து நாங்கள் வருத்தப்படுவோமே ஒழிய செல்வராஜ் வருந்தியதாக தெரியவில்லை.